கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதனை ஈடுகட்டும் விதமாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரத்தான் வீரர் பவுஜா சிங் பலியான விவகாரம்: விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியவர் கைது
பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங். பியாஸ் கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் வெளியிட்டு இருந்தனர்.
கந்தகோட்டம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - கைது
பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் இன்று 9-வது நாளாக இன்றும் நீடித்தது.
தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் எந்த நேரத்திலும் அது வெடிக்கும் என்றும் பள்ளிக்கு ஒரு இ மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம் நேரில் காட்டி, மகிழ்ச்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.
அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு
அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு நாளும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும் என்றும், வார இறுதியில் பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் வழக்கு
படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜராகி உள்ளார்.
கடந்த மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை தொடங்குகிறது
கடலூர் ரெயில் விபத்து சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்
கடலூர் ரெயில் விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரெயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.
இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரெயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரெயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தெற்கு ரெயில்வே குழுவின் விசாரணை முடிந்து, அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.