தலையங்கம்

ரெயிலை காணாத மாநில தலைநகர்


ரெயிலை காணாத மாநில தலைநகர்
6 Sept 2025 6:29 AM IST

கட்டுமான பணியில் தமிழகத்தின் பல வல்லுனர்களும் ஈடுபட்டு இருந்தது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

null

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் கடைசி மாநிலம் மிசோரம் தான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆரம்ப காலங்களில் ஆயுத போராட்டங்களை சந்தித்து வன்முறை மாநிலமாக இருந்த மிசோரம், இப்போது அமைதி தவழும் மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ‘சோரம் மக்கள் இயக்கம்’ என்ற கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மற்றும் மிசோ தேசிய முன்னணி கட்சிகள் வலுவிழந்து எதிர்க்கட்சிகளாக இருக்கின்றன. மிசோரம் முழுக்க, முழுக்க ரம்மியமான மலைத்தொடர்களை கொண்ட குளுமையான மாநிலமாகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதான் உயர்ந்து நிற்கிறது.

இதன் எல்லையில்தான் மியான்மர் நாடு இருக்கிறது. அங்கு இருந்து வரும் அகதிகள் இந்த மாநிலத்துக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். மிசோரமின் தலைநகர் ஐஸ்வால் ஆகும். கல்வியறிவில் முன்னேறியுள்ள மாநிலமாக மிசோரம் விளங்குகிறது. இங்கு 98 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். அனைத்து மக்களும் இப்போதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். வேளாண்மை சார்ந்த தொழில்கள்தான் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. வேறு தொழில்கள் கிடையாது. இங்கு தமிழர்களும் வாழ்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளாகியும் ஐஸ்வால் உள்பட பெரும்பான்மையான பகுதி மக்கள் இன்னும் ரெயில் போக்குவரத்தை அறியாதவர்களாக இருந்து வந்தார்கள்.

மாநிலத்தின் எல்லை பகுதியான பைராபிக்கு மட்டும், அண்டை மாநிலமான அசாம் எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை 2016-ல் போடப்பட்டது. வெறும் 5 கிலோ மீட்டருக்கு மட்டுமே இருப்பு பாதை இருப்பதால் ரெயிலில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டுமே அதை பயன்படுத்துகிறார்களே தவிர, அன்றாட போக்குவரத்துக்காக இதை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் பைராபி முதல் சாய்ராங் வரையில் 51.38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.8,071 கோடி செலவில் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. சாய்ராங்கில் இருந்து தலைநகர் ஐஸ்வாலுக்கு 20 கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கிறது. அங்குவரை இந்த ரெயில் பாதையை நீட்டித்து இருந்தால் இன்னும் பயனாக இருந்து இருக்கும் என்பது இந்த பகுதி மக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த ரெயில் பாதையை அமைப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஏனென்றால் அடர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் என்று பல இன்னல்களை கடந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 12.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 48 சுரங்க பாதைகள் மற்றும் 153 பாலங்களை கொண்டது இந்த வழித்தடம். இது ‘என்ஜினீயரிங் அதிசயம்’ என புகழப்படுகிறது. இதற்கு கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதற்காக கரடு, முரடான மலைகளை குடைந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டன. அது அந்த மக்களுக்கு நல்ல சாலை வசதியை கொடுத்து விட்டது. இந்த கட்டுமான பணியில் தமிழகத்தை சேர்ந்த பல வல்லுனர்களும் ஈடுபட்டு இருந்தது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும். இந்த புதிய ரெயில் பாதையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இது ஒரு பெருமை என்றால் மிசோரமில் இருந்து மியான்மாருக்கும், அசாமில் இருந்து பூடானுக்கும், திரிபுராவில் இருந்து வங்காளதேசத்துக்கும் ரெயில் பாதை அமைக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இவையெல்லாம் நிறைவேறினால் இந்தியாவின் பொருளாதாரமும், வர்த்தகமும் மேம்படும்.