தலையங்கம்

நிஜத்தை படம் பிடித்துக்காட்டும் நிசார் செயற்கைக்கோள்


நிஜத்தை படம் பிடித்துக்காட்டும் நிசார் செயற்கைக்கோள்
2 Aug 2025 4:23 AM IST

நிசார் என்பது செயற்கைக்கோள் மட்டுமல்ல, உலக ஒற்றுமையின் அடையாளம் என்று இஸ்ரோ பெருமைப்பட தெரிவித்துள்ளது.


விண்வெளியில் இருந்து பூமியை முழுமையாக கண்காணிக்கும் நடவடிக்கையில் புரட்சியை ஏற்படுத்தும் "நிசார் செயற்கைக்கோள்" ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது இரு நாடுகளும் இணைந்து ரேடார் செயற்கைக்கோளை வடிவமைத்து விண்ணுக்கு அனுப்பவேண்டும் என்று ஒப்பந்தமிடப்பட்டது. வெறும் ஒப்பந்தத்தோடு நின்றுவிடாமல் உடனடியாக அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி இந்த செயற்கைக்கோளுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணிகள் நாசாவில் தொடங்கின. இதை முழுமையாக உருவாக்க 10 ஆண்டுகளானது.

இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்து கலிபோர்னியாவில் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து விண்ணில் ஏவுவதற்கு தயாரானபோது அதில் அதிக வெப்பமடைவதற்கான காரணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் கலிபோர்னியாவுக்கு அனுப்பப்பட்டு, அதற்குமேல் வெப்பத்தை குறைக்கும் வகையிலான பூச்சு பூசப்பட்டு மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

முழுமையான சோதனைக்கு பிறகு கடந்த மாதம் 30-ந்தேதி மாலை 5.40 மணிக்கு நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. ரூ.12,500 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 2,393 கிலோ எடை கொண்டது. இஸ்ரோவும், நாசாவும் அந்த செலவை சரிபாதியாக பகிர்ந்துகொண்டுள்ளன.

ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட், இந்த செயற்கைக்கோளை சுமந்து சென்று விண்ணில் ஏவியது. நிசார் என்ற இந்த பெயர் நாசா, இஸ்ரோவின் பெயர்களையும் மற்றும் அதன் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது. இந்த செயற்கைக்கோளில் இரண்டு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று இஸ்ரோவுக்கும், மற்றொன்று நாசாவுக்கும் உரியது.

இந்த ரேடார்கள் மழை, இரவு, மேகங்கள் இருந்தாலும் என எந்த காலநிலையையும் பொருட்படுத்தாமல் பூமியை படம் எடுக்கும் திறன்கொண்டது. நாசாவின் எல் பேண்டு மற்றும் இஸ்ரோவின் எஸ் பேண்டு என்ற இரட்டை அதிர்வெண்களை பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள் நிசார் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உலகை உயர் தொழில்நுட்பத்திறனுடன் ஸ்கேன் செய்து அனைத்து வானிலை தரவுகளையும் துல்லியமாக வழங்கும் திறன்கொண்டது.

நிலச்சரிவு, நிலநடுக்கம், வெப்பநிலை மாற்றம் கண்காணிப்பு, பசுமைக்காடுகள், பனி உருகுதல் கண்காணிப்பு, நெல், கோதுமை போன்ற பயிர்களின் வளர்ச்சி நிலை, கடலோர கண்காணிப்பு போன்றவற்றை துல்லியமாக படம் பிடித்துக்காட்டும். இயற்கை பேரிடர்களை இந்த செயற்கைக்கோள் வழங்கும் தரவுகள் மூலம் முன்கூட்டியே கணிக்கவும் முடியும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ள வழிவகுக்கும்.

இயற்கை பேரழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு இது ஒரு புதிய சக்திவாய்ந்த கருவியாக செயல்படும். பொதுவாக ஒரு செயற்கைக்கோளின் தரவுகள், படங்களை அந்த செயற்கைக்கோள் எந்த நாட்டுக்குரியதோ அந்த நாடு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஆனால் நிசாரை பொருத்தமட்டில் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இதன் தரவுகள், படங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

அதனால்தான் இஸ்ரோ, "நிசார் என்பது செயற்கைக்கோள் மட்டுமல்ல, உலக ஒற்றுமையின் அடையாளம்" என்று பெருமைப்பட கூறியுள்ளது. மொத்தத்தில் உலகத்துக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக கொடுத்த பரிசு இது.