தலையங்கம்

டெஸ்லா போனால் என்ன; மற்ற நிறுவனங்கள் வருகின்றன


டெஸ்லா போனால் என்ன; மற்ற நிறுவனங்கள் வருகின்றன
19 Jun 2025 5:26 AM IST

இதுபோன்ற கார்களுக்கு இப்போது 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது.

கார் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் இப்போது பெட்ரோல்-டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் வாங்குவதில்தான் நாட்டம் இருக்கிறது. மிகப்பெரிய கார் கம்பெனியான மாருதி நிறுவன கார்களின் விற்பனை கடந்த மே மாதத்தில் சரிந்துள்ளது. இன்னொரு பக்கம் அமெரிக்க கோடீசுவரரான எலான் மஸ்க்கின், டெஸ்லா கார் நிறுவனம் தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடந்துவந்தது. எலான் மஸ்குடன் தொடர்பை அறுத்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டவர். அவர் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்கப்போகிறது என்ற செய்திவந்தவுடன் இது மிகவும் நியாயமற்றது என்றார்.

டிரம்பின் எதிர்ப்பை புரிந்துகொண்ட எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்கும் எண்ணத்தில் இருந்து அப்போது பின்வாங்கிவிட்டார். ஆனாலும் அந்த கார் விற்பனைக்கு இந்தியாவில் ஷோரூம்களை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். டெஸ்லா போனாலும் மற்ற உலகளாவிய கார் நிறுவனங்களான மெர்சிடெஸ், வோல்க்ஸ்வாகன், ஸ்கோடா, ஹூண்டாய், கியா போன்ற கார் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்க அதிக முனைப்புடன் இருக்கிறார்கள் என்று மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். இந்தநிலையில், இந்தியாவில் சர்வதேச நிறுவனங்கள் மின்சார கார் தொழிற்சாலைகளை தொடங்குவதை ஊக்குவிக்கும் திட்டத்துக்காக சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.4,150 கோடி முதலீடு செய்யவேண்டும்.

இந்த 3 ஆண்டுகளில் அந்த நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலையை நிறுவி, உற்பத்தியையும், விற்பனையையும் தொடங்கிவிடவேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் உலகளாவிய அளவில் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருக்கவேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்கு மற்றொரு சலுகையையும் மத்திய அரசாங்கம் வழங்குகிறது. ஒவ்வொன்றும் ஏறத்தாழ ரூ.30 லட்சம் மதிப்புள்ள 40 ஆயிரம் கார்களை அந்த நிறுவனங்கள் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும். இதுபோன்ற கார்களுக்கு இப்போது 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க முன்வந்துள்ள நிறுவனங்கள் அவர்கள் இறக்குமதி செய்துகொண்டு வரும் 40 ஆயிரம் கார்களுக்கும், ஆண்டுக்கு 8 ஆயிரம் கார்கள் என்ற கணக்கில் 15 சதவீதம் மட்டுமே சுங்க வரியாக விதிக்கப்படும் என்று அந்த வழிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய கார் நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்த்துள்ளது.

இந்த அறிவிப்பையும், சலுகைகளையும் பயன்படுத்தி பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி முழு உற்பத்தியை கண்டு, 5 ஆண்டுகள் வரை தங்கள் நிறுவன கார்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பால், அந்த நிறுவனங்களுக்கும் பலன் கிடைக்கும். மக்களும் வெளிநாட்டு மின்சார கார்களை குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளமுடியும். புதிதாக இந்தியாவுக்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களை அனைத்து வசதிகளையும் பெற்று மின்சார வாகனங்களின் கேந்திரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் முயற்சியில் தொழில்துறை ஈடுபடவேண்டும்.