ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update:2025-07-17 16:29 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், நவமலைபதியைச் சேர்ந்த 22 நபர்கள் இன்று காலை டாடா ஏஸ் வாகனத்தில் வேலை நிமித்தமாக ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், வால்பாறை-ஆழியார் சாலை, சின்னார்பதி என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ராணி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலும், திலகராஜ் (வயது 40) என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சஞ்சய்குமார் (வயது 20) என்பவர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 19 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்