10 வயது சிறுமியால் பாதுகாப்பாக நடமாட முடியாத ஒரு ஆட்சி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்த கொடூரக் காட்சி மு.க.ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2025-07-17 21:46 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்களில் வெளியாகி உள்ள சிறுமி கடத்தப்படும் காட்சி காண்போரை நடுங்கச் செய்கிறது; நெஞ்சைப் பதைக்கிறது. இந்த கொடூரக் காட்சி மு.க.ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா?

தன்னுடைய ஆட்சியில், ஒரு பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனையாவது இந்த பொம்மை முதல்வருக்கு இருக்கிறதா? இதற்கு மேலும், "சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் வீண் அரசியல் செய்கிறார்" என்று சொல்வார் என்றால், ஸ்டாலின் வானத்தைப் பார்த்து உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றே பொருள்!

10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின், யாருடனும் இருந்து என்ன பயன்?

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை உறுதி செய்யவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆட்சி புரிவதற்கான அருகதை துளியும் இல்லாத ஒரு கட்சியிடம், பொம்மை முதல்-அமைச்சரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுப்பதே, தமிழகப் பெண்களைக் காக்க ஒரே வழி!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்