தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த ஒருவர், சிப்காட் பகுதியில் வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (வயது 24) என்பவர் கடந்த 1.6.2025 அன்று வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன்(21) என்பவர் கடந்த 17.6.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் தொடர்புடைய மாரிதங்கம், சந்திரன் ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.