இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நாளை சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தொழில் முதலீடுகள் குறித்தும், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே இந்த கைது சம்பவத்தின்போது, சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் என வழக்கறிஞர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையுமில்லை. அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது அதை காவல் துறையினர் தடுத்தால் தலையிடலாம். அனுமதி பெறவில்லை என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.4,000 வரை கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.600 ரூ800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து நெல்லை, சேலம், திருச்சி வழித்தடங்களுக்கு ரூ.1,500 - ரூ.3,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதந்திர தின விழா: கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்பு
சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தலைமை நிலை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
தூய்மைப்பணியாளர்கள் கைது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு
நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
வட இந்திய மாநிலங்களில் கனமழை: வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி
நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று 'ஆகஸ்ட் 14' பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று. முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரங்கம் அதிர்கிறதா..? 'கூலி' திரைப்படம் எப்படி இருக்கிறது..? திரை விமர்சனம்
திரை விமர்சனம்
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தனது கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை வேட்டையாடி வருகிறார்.
அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.