ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட இருவரை போலீசார் தாக்கியுள்ளனர்: வன்னி அரசு
ஜனநாயக ரீதியாக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். இச்சூழலில்,நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை. போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வழக்கறிஞர் நிலவு மொழிமற்றும் சமூக செயற்பாட்டாளர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.