இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Nov 2025 3:24 PM IST
கோவை: வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- 19 Nov 2025 2:49 PM IST
மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத் தோட்டங்கள் - சீமான்
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
- 19 Nov 2025 2:48 PM IST
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி
கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார்.
- 19 Nov 2025 2:47 PM IST
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஆதவ் அர்ஜுனா
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 21) இன்று கத்தியால் குத்திக்கொலை செய்தார். காதலிக்க மறுத்ததாக கூறி பள்ளி மாணவி ஷாலினியை இளைஞர் முனிராஜ் குத்திக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 19 Nov 2025 1:53 PM IST
புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு
சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு வருகை தந்தார். தொடர்ந்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் வேத கோஷங்கள் முழங்க பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர்.
- 19 Nov 2025 1:50 PM IST
அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
டெல்லியில் கடந்த 10-ந் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி இந்த தாக்குதலில் ஈடுபட்டதை தேசியபுலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கூட்டுச்சதியில் ஈடுபட்ட டாக்டர்கள் அகமது ராதர், முசமில் ஷகீல், சாகின் சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- 19 Nov 2025 1:35 PM IST
காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விரும்பினார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க.வும் போட்டியிட தயாராகி வருகிறது. அதற்கேற்ப ஆட்சியில் பங்கு என அவர் அறிவித்தது, கூட்டணி கட்சிகளை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது. எனினும், தொடக்கத்தில் இருந்து, பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்றும் தி.மு.க.வை அரசியல் எதிரி என்றும் பேசி வருகிறார்.
- 19 Nov 2025 12:14 PM IST
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 13 பேர் பலி
லெபனானின் தெற்கே சிடோன் என்ற கடலோர நகரில், பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களையும், உடல்களையும் மீட்க ஆம்புலன்சுகள் சென்றுள்ளன.
இதுபற்றி இஸ்ரேல் கூறும்போது, இஸ்ரேல் மற்றும் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, ஹமாஸ் அமைப்பு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பகுதி மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது.
- 19 Nov 2025 11:50 AM IST
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை: அன்புமணி கண்டனம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
ராமேசுவரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 19 Nov 2025 11:45 AM IST
பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்: மராட்டிய அரசியலில் பரபரப்பு
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. நேற்று கல்யாண் - டோம்பிவிலியை சோ்ந்த சிவசேனா முன்னாள் கவன்சிலர்கள் சிலர் மாநில தலைவர் ரவீந்திர சவான் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்தநிலையில் நேற்று வாராந்திர மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மந்திராலயாவில் நடந்தது. கூட்டத்தில் சிவசேனா தரப்பில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மட்டுமே கலந்து கொண்டார். சிவசேனா மந்திரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசேனா மந்திரிகள் மந்திரி சபை கூட்டத்தை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாயுதி கூட்டணியில் மோதல் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறினர்.


















