தமிழகத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்


தமிழகத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
x

ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

சென்னை,

இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆக்கி இந்தியா கூட்டமைப்பு இன்று தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டது. இந்த நிகழ்வின்போது தொடருக்கான அதிகாரபூர்வ லோகோவும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆக்கி இந்தியா கூட்டமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இது குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரை நடத்த தமிழ்நாடு தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மொத்தம் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து நான் ஏற்கனவே விளக்கினேன்.

முறையான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லோகோ வெளியிடப்பட்டது. இந்த மதிப்புமிக்க போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசும் ஆக்கி இந்தியாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 24 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தொடர்ச்சியான ஆதரவு தரும் எங்களது முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை 2025 தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story