ஆசிய கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-தென்கொரியா அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-தென்கொரியா அணிகள் இன்று மோதல்
x

இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ராஜ்கிர்,

12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சுற்றை எட்டிய இந்தியா, தென்கொரியா, மலேசியா, சீனா அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.

இதில் சூப்பர்4 சுற்றில் நேற்று இரவு நடந்த கடைசி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி 2-வது வெற்றியை ருசித்தது. இந்தியா முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் மலேசியாவை வென்றும் இருந்தது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா (4-வது நிமிடம்), தில்பிரீத் சிங் (7-வது நிமிடம்), மன்தீப் சிங் (18-வது நிமிடம்), ராஜ்குமார் (37-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (39-வது நிமிடம்), அபிஷேக் (46-வது, 50-வது நிமிடம்) கோலடித்தனர்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் டிராவும், அடுத்த ஆட்டத்தில் சீனாவிடம் தோற்றும் இருந்தது.

சூப்பர் 4 சுற்று முடிவில் இந்திய அணி 7 புள்ளியுடன் முதலிடமும், தென்கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மலேசியா (3 புள்ளி) 3-வது இடமும், சீனா (3 புள்ளி) 4-வது இடமும் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை பறிகொடுத்தன.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் (இரவு 7.30 மணி) மல்லுக்கட்டுகின்றன. இதில் வெற்றி பெற்று அணி சாம்பியன் பட்டம் வெல்வதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் சந்திக்கின்றன.

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி

இதேபோல் 11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

இதில் 2-வது நாளான நேற்று பி பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் அணியில் ஹிரோகா முரயமா (10-வது நிமிடம்), புஜிபயாஷியும் (58-வது நிமிடம்), இந்திய அணியில் ருதுஜா (30-வது நிமிடம்), நவ்னீத் கவுரும் (60-வது நிமிடம்) கோல் போட்டனர். முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை (11-0) விரட்டியடித்து இருந்த இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை சாய்த்து முதல் வெற்றியை பெற்றது.

1 More update

Next Story