அகில இந்திய ஆக்கி அரையிறுதி: இந்திய கடற்படை - இந்திய ராணுவம் நாளை மோதல்

10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
சென்னை,
எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
8-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே 5-2 என்ற கோல் கணக்கில் போபால் என்.சி.ஓ.இ. அணியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை தனதாக்கியது.மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.
லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ரெயில்வே (12 புள்ளி) முதலிடமும், இந்திய ராணுவம் (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. தமிழ்நாடு (5 புள்ளி) 3-வது இடமும், போபால் என்.சி.ஓ.இ. (4 புள்ளி) 4-வது இடமும், மராட்டியம் (1 புள்ளி) கடைசி இடமும் பெற்று வெளியேறின. 'பி' பிரிவில் இந்திய கடற்படை (12 புள்ளி) முதலிடத்தையும், இந்தியன் ஆயில் (9 புள்ளி) 2-வது இடத்தையும் சொந்தமாக்கி அரையிறுதிக்கு தகுதி பெற்றன. கர்நாடகம் (4 புள்ளி) 3-வது இடமும், மலேசியா ஜூனியர் (4 புள்ளி) 4-வது இடமும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (0) கடைசி இடமும் பெற்று நடையை கட்டின.
இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் அரையிறுதிக்கு ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே- இந்தியன் ஆயில் (மாலை 4 மணி), இந்திய கடற்படை-இந்திய ராணுவம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.