மற்றவர்கள் குறை கூறுவதால் விரக்தியா..? இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்..!

நமது முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பு அளிக்கவேண்டும்.
நம்முடைய வாழ்க்கையில் பலர் நம்மிடமிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். அதில் சிலரே அந்த குறைகளை திருத்துவதற்கு உதவுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருடைய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், யாருடைய கருத்தை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு ஊரில் பிரபலமான ஓவியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தான் வரையக்கூடிய ஓவியம் உண்மையிலேயே நன்றாக தான் இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள விரும்பினார். இதற்காக ஒரு பிசியான சாலையில் அவருடைய ஓவியத்தை வைத்துவிட்டு, ‘இதில் ஏதேனும் குறையிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்’ என்று துண்டு பேப்பரில் எழுதிவைத்து விட்டு வந்துவிட்டார்.
அன்று மாலை அந்த ஓவியர் சாலையில் வைத்த ஓவியத்தை பார்க்க வரும்போது, அதில் மக்கள் நிறைய குறைகளைக் கண்டுப்பிடித்து எழுதி வைத்திருந்தார்கள். இதைப் பார்த்த ஓவியரின் மனம் சுக்கு நூறாக உடைந்துப் போகிறது. அதிலிருந்து ஓவியமே வரையக்கூடாது என்ற முடிவுக்கு வந்து ஓவியம் வரைவதையே நிறுத்தி விடுகிறார்.
இதைப் பார்த்து வருத்தமடைந்த ஓவியரின் தாய், அவரிடம் சென்று, 'எனக்காக ஒரேயொரு ஓவியம் வரைந்து அதை அதே இடத்தில் வைத்துவிட்டு வா! ஆனால் இந்தமுறை நான் சொல்வது போல துண்டுச்சீட்டில் எழுதிவைக்க வேண்டும்' என்று சொல்கிறார். இதைக்கேட்ட ஓவியரும் அதைப்போலவே செய்கிறார். ‘இந்த ஓவியத்தில் குறை கண்டுபிடிப்போர் அதை திருத்திவிட்டு செல்லவும்’ என்று எழுதி வைத்தார்.
அன்று மாலை அந்த ஓவியத்தை வந்து பார்க்கும்போது அது வைத்துவிட்டு செல்லும்போது எப்படியிருந்ததோ அப்படியே இருந்தது. யாருமே அந்த ஓவியத்தில் எந்த குறையும் கண்டுபிடிக்கவில்லை.
இப்போது அந்த ஓவியரின் தாய் சொல்கிறார், ‘இந்த உலகத்தில் குறைகளைக் கண்டுப்பிடிக்க ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால், அதை திருத்த ஒரு சிலராலேயே முடியும். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களின் கருத்தையெல்லாம் நாம் எடுத்துக்கொண்டு மனம் நொந்துப் போகக்கூடாது’ என்று கூறினார்.
இந்த கதையில் வரும் தாய் சொல்வதும் சரிதானே..! நம் வாழ்வில் குறை சொல்பவர்களெல்லாம் அதை திருத்த நமக்கு உதவுவதில்லையே? பிறகு ஏன் அந்த எதிர்மறை கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்? நமது முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பு அளிக்கவேண்டும். இதேபோல் மற்றவர்களை குறை கூறுவதையும் நிறுத்த வேண்டும்.






