இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Dec 2025 3:44 PM IST
ஒடிசாவில் நக்சலைட்டுகள் சரண்
ஒடிசா, மல்கனகிரியில் 22 நக்சலைட்டுகள் துப்பாக்கிகள், வெடி பொருட்களை ஒடிசா போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைந்தனர்.
- 23 Dec 2025 3:07 PM IST
ஒன்றரை மணி நேரம் நடந்த அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை நிறைவு
சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இடையே ஒன்றரை மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதற்கட்ட பேச்சு சுமூகமாக இருந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- 23 Dec 2025 2:27 PM IST
விஜய் ஹசாரே போட்டிகள் ரத்து
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த விஜய் ஹசாரே போட்டிகள் பாதுகாப்பு, மின்சாரம், கூட்ட கட்டுப்பாடுகளில் திருப்தி இல்லை என கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி விளையாட இருந்த நிலையில் போட்டி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளை டெல்லி - ஆந்திரா இடையேயான போட்டி நடைபெற இருந்தது.
- 23 Dec 2025 2:25 PM IST
ஜனநாயகன்’ ரிலீஸாவதில் சிக்கல்
ஆந்திரா, தெலுங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இந்தியிலும் இதுவரை பெரியளவில் ப்ரோமோஷன் செய்யாததால், அங்கேயும் மிக குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- 23 Dec 2025 2:23 PM IST
`QR ஸ்டிக்கரை ஒட்ட உத்தரவு''
போலி இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
- 23 Dec 2025 1:20 PM IST
இலங்கைக்கு சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான நிதியுதவி தொகுப்பை அறிவித்தது இந்தியா
புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ரூ.897 கோடி நிவாரண நிதியும், ரூ.3,140 கோடி மதிப்பிலான சலுகை கடன் தொகையும் அறிவித்தது இந்தியா. இலங்கையின் நெருக்கடி காலங்களில் உதவ முன்வரும் முதல் நாடாக இந்தியா இருப்பதை இந்த உதவி மீண்டும் பிரதிபலிப்பதாக, கொழும்புவில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசி உள்ளார்.
- 23 Dec 2025 1:10 PM IST
பியூஷ் கோயலை சந்திக்க பழனிசாமி வருகை
பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்த சென்னை லீலா பேலஸ் வந்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். தொகுதி பங்கீட்டில் பாஜகவின் எதிர்பார்ப்பு போன்றவற்றை பழனிசாமியிடம் கோயல் பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Dec 2025 12:36 PM IST
ஜன.6 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை
ஜன.6 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். டிச.15 ஆம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்காக பொங்கல் வேட்டி, சேலைகள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- 23 Dec 2025 12:33 PM IST
அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் பொது செயலாளர் கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனுவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காத்திருக்கிறார். தீப்பெட்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மந்திரி கோயலிடம் மனு அளிக்க கடம்பூர் ராஜு வருகை தந்துள்ளார். நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்ற கடம்பூர் ராஜுவை தனது காரிலேயே கமலாலயம் அழைத்து வந்தார் நயினார். மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் மனு அளிக்க கமலாலய தரைதளத்தில் கடம்பூர் ராஜு காத்திருக்கிறார். பியூஷ் கோயல் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல் தளத்தில் நடந்து வருகிறது.
- 23 Dec 2025 12:19 PM IST
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்
வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















