கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

கோப்புப்படம்
சேலத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சேலத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த, திவ்யதர்ஷினி (வயது 17) என்பவர் 23.1.2026 அன்று பிற்பகல் சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவி திவ்யதர்ஷினியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






