அரசு மருத்துவர்கள் போராட்டம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
ஊதியப்பட்டை நான்கை பணியில் சேர்ந்த 12 ஆம் ஆண்டில் வழங்கிட வேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை கூடுதலாக பணி நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது.
அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல், சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.
போராடும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






