மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு


மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு
x

அரசு மீது நிறுவனங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

மதுரை,

மதுரையில் இன்று ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ரூ. 37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56,766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழர் நாகரீகம் எந்த அளவுக்கு தொன்மையானது என்பதையே மதுரை எடுத்துக்கூறுகிறது. இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறி வருகிறேன். தென் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக மதுரை திகழ்கிறது. மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் முதலீடுகள் கிடைக்கும். ‘தூங்கா நகரம்’ என்று கூறுவதை விட ‘விழிப்புடன் இருக்கும் நகரம்’ என்பதே மதுரைக்கு பொருத்தமானது. முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது. ஒரு மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும். சட்டம், ஒழுங்கு, தொழிலுக்கு உகந்த சூழல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தே நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு உள்ளது.

ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். மதுரை கோயில் நகரமாக இருந்தால் மட்டும் போதுமா? தொழில் நகரமாக மாற்ற வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை மதுரையில் நிறுவியுள்ளன. மதுரையை தொழில் நகரமாக்குவதே என் ஆசை.மேலூரில் 278.26 ஏக்கரில் பிரமாண்ட சிப்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நாட்டிலேயே அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஒன்றிய அரசுடன் இணைந்து விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்கா அமைகிறது. கப்பல் கட்டும் தொழிலுக்காக ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ₹11,760 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க உள்ளோம். அதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி.மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என நிரூபித்து காட்டியுள்ளோம். முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது. முதல் அமைச்சர் கேட்டார் என்பதற்காக முதலீடு செய்துவிட மாட்டார்கள். மதுரைக்கு பூங்கா நகரம் என்ற பெயரும் உள்ளது. அரசு மீது நிறுவனங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி” இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story