பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் - தமிழக அரசு

பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது
சென்னை,
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் எனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என்று மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.






