அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்


அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 13 Jan 2026 8:50 AM IST (Updated: 13 Jan 2026 8:51 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நகரம் குறித்த அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை என ராஜ்தாக்கரேக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து உள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலாடு, சயான் கோலிவாடா, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மக்கள் `மூன்று என்ஜின்' ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர். நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் இங்கு மட்டும்தான் `மூன்று என்ஜின்' ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

பிரதமர் மோடி டெல்லியில் உள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருக்கிறார். தற்போது மும்பை மேயர் பதவியையும் பா.ஜனதா கைப்பற்ற உள்ளது. மும்பை மராட்டிய நகரம் அல்ல, சர்வதேச நகரம்” என்றார்.அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல எனக்கூறிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்றார்.

அண்ணாமலை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறியதாவது:- அண்ணாமலையின் பேச்சை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர் வேறு மாநிலத்தை சோ்ந்தவர். அது உண்மைதான். அவருக்கு இந்தி சரியாக தெரியாது. அவர் இந்தி பேச முயற்சி செய்கிறார். ஆனால் அவர் பேசியதை பிரதமர் மோடி கூறியது போல தாக்கரே சகோதரர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பம்பாய் என்ற பெயரை மும்பை என மாற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பா.ஜனதாவை சேர்ந்த ராம்நாயக் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்

1 More update

Next Story