அயோத்தி ராமர் கோவிலில் தொழுகை செய்ய முயன்ற காஷ்மீர் நபர் கைது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று காஷ்மீரை சேர்ந்த அகமது ஷேக் (வயது 55) என்ற இஸ்லாமியர் சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற அகமது ஷேக் கோவில் வளாகத்தில் இஸ்லாமிய மத வழிபாடான தொழுகை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த ஊழியர்கள், அகமது ஷேக்கை தடுத்து நிறுத்தினர். அப்போது, அகமது ஷேக் சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து, அவரை போலீசில் ஒப்படைந்தனர். உடனடியாக அகமது ஷேக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை , அகமது ஷேக் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மன நல பாதிப்பிற்காக காஷ்மீரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அயோத்தி ராமர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






