முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

கொளத்தூர் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
புதுடெல்லி,
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கு விசாரணயை தள்ளிவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் முன்னிலையில் இன்று (புதன் கிழமை) நடைபெறுகிறது.






