விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் முகூர்த்த தினம் என்பதால் கோவில் சண்முக மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.






