கார்த்திகை சஷ்டி.. பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் நடைபெற்ற சஷ்டி பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜா சுவாமி,
நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வர் கோவிலில் உள்ள பாலமுருகன், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சஷ்டி பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






