மயிலாடுதுறை துலா உற்சவம்: மாயூரநாதர் கோவில், வள்ளலார் கோவிலில் கொடியேற்றம்


மயிலாடுதுறை துலா உற்சவம்: மாயூரநாதர் கோவில், வள்ளலார் கோவிலில் கொடியேற்றம்
x

மாயூரநாதர் கோவிலில் திருக்கொடியேற்றம்

துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் 16-ம் தேதி நடைபெறுகிறது.

மயிலாடுதுறை

கங்காதேவி முதலான புண்ணிய நதிகள் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது, பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி 30 நாட்களும் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ஆகையால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அபயாம்பிகை உடனான மாயூரநாதர் சாமி, ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி உடனான அய்யாறப்பர் ஆகிய சாமிகளும் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளி காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தீர்த்தவாரி நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி ஐப்பசி மாத பிறப்பு முதல் நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மாயூரநாதர் சாமி கோவில், வள்ளலார் கோவிலில் 10 நாள் துலா உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அபயாம்பிகை உடனான மாயூரநாதர் சாமி கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை சங்கரலிங்க தம்பிரான் தம்பிரான் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர் கோவிலில் (வள்ளலார் கோவில்) துலா உற்சவ கொடியேற்றம் நடந்தது. அதனை முன்னிட்டு சாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து தருமபுர ஆதீனம் கட்டளை சிவகுருநாத தம்பிரான் சாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியாளர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவாக வரும் 11-ம் தேதி சகோபுர தரிசனம், 13ம் தேதி திருக்கல்யாணம், 15-ம் தேதி திருத்தேரோட்டம், 16-ம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

1 More update

Next Story