கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் 26-ம் தேதி கேது பெயர்ச்சி விழா

கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இது கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இவரை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகம், திருமணத்தடைகள் விலகுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் பெறலாம் என்பது ஐதீகம்.
கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி ஆகிறார். அவ்வகையில் கேது பகவான் வருகிற 26 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:20 மணிக்கு கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார்.
கேது பெயர்ச்சியை முன்னிட்டு, நாகநாத சுவாமி கோவிலில் காலையிலிருந்து கேது பரிகார மகா யாகம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சரியாக மாலை 4.20 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருட கேது பெயர்ச்சி காரணமாக மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம், தனுசு மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் உரிய பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.