பம்பை கணபதி கோவிலில் நாளை மறுநாள் கலச பூஜை: 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

பம்பை கணபதி கோவிலில் நாளை மறுநாள் கலச பூஜை நடக்கிறது.
சபரிமலை,
தென்னகத்தின் கங்கை என அழைக்கப்படும் பம்பை நதிக்கரையில் அமைந்திருப்பது கன்னிமூல விநாயகர் கோயில். புண்ணிய நதி பம்பையில் குளித்து நதிக்கரையில் உள்ள கன்னிமூல கணபதியை வணங்கி, அவருக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடருகின்றனர். நீலிமலையும், செங்குத்தான் அப்பாச்சி மேடும் கடக்கும் பயணம் மங்களகரமாக நிறைவேற கணபதியின் அருள் வேண்டப்படுகிறது.
இந்த நிலையில், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பம்பை கணபதி கோவிலில் அஷ்டபந்த கலச பூஜை நடைபெறுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த பூஜை வழிபாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இதையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை ஆச்சார்ய வாரணம், சுத்தி கிரியை பூஜைகள் நடக்கிறது. நாளை காலை கணபதி ஹோமம், பிம்ப சுத்தி கிரியை பூஜைகள், மாலையில் பிரம்ம கலச பூஜை, பரிகலச பூஜை, ஆதிவாச ஹோமம் நடக்கிறது.
விழாவில் நாளை மறுநாள் காலை 10.15 மணி முதல் 11 மணிக்குள் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ம தத்தன் மற்றும் மேல் சாந்திகள் மாதவன் போற்றி, பிரதீப் தலைமையில் அஷ்ட பந்த கலச பூஜை நடைபெறுகிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், கலசத்திங்கலில் உஷபூஜை, மரபாணி, அஷ்ட பிரம்ம கலசாபிஷேகம், பரி கலசாபிஷேகம், பிரசன்ன பூஜை போன்ற சடங்குகள் நடக்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை வழிபாடுகளில் நேரில் பங்கேற்க பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கலச பூஜை நடைபெறும் நாட்களிலும் பக்தர்கள் நேரில் காணவும், தொட்டு வணங்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.