திருமலையில் சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம்


திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தெற்கு திசையில் சில மைல் தொலைவில், சேஷாசல வனப்பகுதியில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத துவாதசி நாளில் சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் இன்று நடைபெற்றது. திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம்.

இந்த சிறப்பு உற்சவத்திற்காக பூஜைப் பொருட்கள், அபிஷேக பொருட்களுடன் ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் கோவிலில் இருந்து ஊர்வலமாக சக்கர தீர்த்தம் சென்றடைந்தனர். அங்கு நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்தனர். ஆரத்தி முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புராணத்தின்படி, திருப்பதி திருமலையில் உள்ள நீரோடை அருகில் 12 ஆண்டுகளாக தவம்புரிந்த பத்மநாப மகரிஷி, அரக்கனால் தாக்கப்பட்டபோது, மகாவிஷ்ணு தனது சக்கராயுதத்தை ஏவி அந்த அரக்கனை அழித்தார். பின்னர் முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பக்தர்களை காப்பதற்காக பகவான் அதே இடத்தில் தனது சக்தி வாய்ந்த சக்கராயுதத்தை விட்டுச் சென்றார். எனவே அந்த நீரோடைக்கு சக்கர தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

வராக புராணத்தின் படி, ஷேஷாசல மலைத்தொடரில் உள்ள ஏழு முக்கிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக சக்கர தீர்த்தம் கருதப்படுகிறது.

1 More update

Next Story