ஆவணி மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தஞ்சை,
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.