மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 30-ந் தேதி ஆனி ஊஞ்சல் திருவிழா


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 30-ந் தேதி ஆனி ஊஞ்சல் திருவிழா
x

அபிஷேக திரவிய பொருட்களை ஜூலை 1-ந் தேதி இரவு 7 மணிக்குள் பக்தர்கள், கோவிலில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதன்படி ஆனி ஊஞ்சல் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும்.

அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள். 9-ந் தேதி ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதியில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

ஆனி உத்திரம் தினமான ஜூலை 2-ந் தேதி அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர், சிவகாமிக்கும் கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமியம்மனுக்கு கோவில் இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர், சிவகாமியம்மன் நான்கு மாசி வீதிகளில் புறப்பாடாகும். இதற்கான அபிஷேக திரவிய பொருட்களை ஜூலை 1-ந் தேதி இரவு 7 மணிக்குள் பக்தர்கள், கோவிலில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அடுத்த மாதம் 10-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story