சுந்தரரை தடுத்து சிவபெருமானை போற்றி பாடவைத்த வேடப்பர்

விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் வேடப்பர் கோவில் அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ளது வேடப்பர் திருக்கோவில் (முருகன் கோவில்). இந்த ஆலயத்தில் முருகப்பெருமான், வேடப்பர் என்ற திருநாமத்துடன் வள்ளி - தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் தீவிர பக்தரான சுந்தரர், திருவாரூரில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடி வந்தார். அதன்படி விருத்தாசலம் வந்த சுந்தரர், விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர்) கோவிலுக்கு செல்லவில்லை. அது மிகவும் பழமைவாய்ந்த கோவில். எனவே அங்கு சென்றால் தனக்குரிய பலன் கிடைக்காமல் போகலாம் என்று எண்ணி, அந்த கோவிலை தவிர்த்தார்.
இதையடுத்து பழமலைநாதர், தன்னை பாடாமல் சென்ற சுந்தரரை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே, தன்னை வணங்காமல் சுந்தரர் இந்த ஊரை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு, தன் மைந்தனான முருகப்பெருமானுக்கு உத்தரவிட்டார். அதன்படி முருகப்பெருமான், மேற்கில் கொளஞ்சியப்பராகவும், தெற்கே பெண்ணாடம் சாலையில் வேடப்பராகவும், வடக்கே கண்டியங்குப்பத்தில் வெண்ணுமலையப்பராகவும், கிழக்கே கோமாவிடந்தலில் கரும்பாயிரம் கொண்டவராகவும் நான்கு புறமும் சுந்தரரை மடக்கினார். பின்பு அவரிடம் இருந்த பொன், பொருளை பறிமுதல் செய்து, அவரை பழமலைநாதரிடம் ஒப்படைத்து பாடவைத்ததாக தல வரலாறு கூறுகிறது.
முருகப்பெருமான், பெண்ணாடம் சாலையில் வேட்டைக்காரனாக மாறுவேடமிட்டு வந்ததால், இத்தல இறைவன் ‘வேடப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.






