'ஆனி தசமி..' நாளை குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்


ஆனி தசமி.. நாளை குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்
x

குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்தால் எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்துக்களுக்கு குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குலதெய்வம் என்பது தாய் தந்தையைப் போல கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாக போற்றப்படுகிறது. குடும்பத்தில் ஒரு கஷ்டம் என்றால் குல தெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வ கோவிலில்தான் நடைபெறும். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குலதெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

எனவே, முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்குகூட செல்வது கிடையாது. ஆனால், குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான் என பெரியவர்கள் கூறி உள்ளனர். எனவே, குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குல தெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும். மற்ற நாட்களில் பெரிய அளவில் பூஜைகள் இருக்காது. சிலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தங்களுக்கு வசதிப்பட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று பூஜை செய்வார்கள். அந்த வகையில் நாளை ஆனி மாதம் 6-ம் தேதி (20.6.2025) தசமி திதி தினம், குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியமான தினமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பாகும். இந்த நாளில் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும், நோய்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் குல தெய்வத்திற்கு தங்களால் முடிந்த நைவேத்யங்களை படைத்து வழிபடவேண்டியது அவசியமாகும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, நேரடியாக குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும். சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் கவலை கொள்ள தேவையில்லை. வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை செய்து தெய்வத்தின் ஆசியை பெறலாம்.

1 More update

Next Story