ராகு-கேது பெயர்ச்சி எப்போது...? - திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட முக்கிய தகவல்

இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது
திருநாகேஸ்வரம்,
2025 - ராகு-கேது பெயர்ச்சி ஏப். 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். நவகிரக தலங்களில் இந்த தலம் ராகு பகவானுக்குரிய பரிகார தலமாகவும் விளங்குகிறது.
18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ராகுக்காண பரிகாரத்தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள மங்கள ராகுக்கு இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
எதிர்வரும் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த ராகு பெயர்ச்சியினால் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.