கிரக தோஷங்களை நீக்கும் ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்


கிரக தோஷங்களை நீக்கும் ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
x

கருவறையில் பத்து மூலவர்கள் இருந்தாலும், ஒரே உற்சவ மூர்த்தியாக லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார்.

திருச்சி

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு 'வடமேற்கே கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தசாவதார திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளிப்பது சிறப்பானதாகும். அனைத்து கோவில்களிலும் ஒவ்வொரு மூலவருக்கும் தனித்தனி உற்சவர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் உள்ள பத்து மூலவருக்கும் ஒரே ஒரு உற்சவர் இருப்பது தனிச்சிறப்பாகும்.

தல புராணம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், திருவரங்கம் கோவில் ராஜகோபுரம், மதில்சுவர் உள்பட கோவில் கட்டுமானப் பணிகளை முன்னின்று நடத்தினார். இதனால் மனம் மகிழ்ந்த ரங்கநாதர், திருமங்கையாழ்வாரின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, தன்னுடைய அவதார திருக்கோலங்களை காட்டியருளினார். இதுவரை அவர் எடுத்த 9 அவதாரங்களையும், இனி எடுக்கப்போகும் 10-வது அவதாரமான கல்கி அவதாரம் எப்படி இருக்கும் என்பதையும் அவருக்கு காட்டி அருளினார். இந்த கோவில் இருக்கும் இடத்தில் இவ்வாறு தசாவதார காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பில் அழகான ராஜகோபுரம் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தின் வலதுபுறம் அகோபில மட ஸ்தாபகரின் சன்னிதி உள்ளது. அதையடுத்து திருமங்கை ஆழ்வார் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இவரது இருபுறமும் நம்மாழ்வார் மற்றும் உடையவர் உள்ளனர். இதன் அருகே திருமங்கை ஆழ்வாரின் உற்சவ விக்ரகம் காணப்படுகிறது.

கோவில் கருவறையில் திருமாலின் தசாவதார திருமேனிகள் கிழக்கு திசை நோக்கி ஒரே வரிசையில் அழகுற அமைந்துள்ளன. அதில் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகின்றனர். வாமனர் இடது கையில் குடையுடனும், வலது கையில் தானம் வாங்குவது போன்றும் உள்ளார். பரசுராமர் வலது கரத்தில் கோடாரியுடனும், ராமர் வில் அம்புடனும், பலராமர் கலப்பையுடனும் காட்சி தருகின்றனர்.

கிருஷ்ணர் நர்த்தன கிருஷ்ணராக ஒரு கையில் நாட்டிய பாவனை காண்பித்தும், மற்றொரு கையில் வெண்ணெய் ஏந்தியும் அருள் பாலிக்கின்றார். கல்கி பகவான் கருவறையில் கடைசியாக அமைந்துள்ளார். இவர் வலது கரத்தில் கத்தியும், இடது கரத்தில் கேடயமும் ஏந்தி குதிரை வானத்தில் காட்சி தருகிறார். கருவறையின் வடக்கு பகுதியில் சேனாதிபதி விஷ்வக்சேனர் நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகிறார்.

கருவறையில் பத்து மூலவர்கள் இருந்தாலும், ஒரே உற்சவ மூர்த்தியாக லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார். அவர் வலது கையில் வரத ஹஸ்த முத்திரையுடனும், இடது கையால் தாயாரை அணைத்துக் கொண்டும் உள்ளார். இவரது பீடத்தை சுற்றி எட்டு சிம்மங்கள் உள்ளன.

கோவில் விமானத்தில், ஒரு அவதாரத்துக்கு ஒரு கலசம் என பத்து அவதாரங்களுக்கும் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கிரகத்துக்கு அதிபதியாக கருதப்படுகிறது. அதன்படி, மச்சம் கேதுவுக்கும், கூர்மம் சனி பகவானுக்கும், வராகம் ராகுவுக்கும், நரசிம்மம் செவ்வாய்க்கும், வாமனர் குருவுக்கும், பரசுராமர் சுக்ரனுக்கும், ராமர் சூரியனுக்கும், பலராமர் குளிகன் மற்றும் மாந்திக்கும், கிருஷ்ணர் சந்திரனுக்கும், கல்கி புதனுக்கும் அதிபதியாக உள்ளனர். இதனால் கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள குறிப்பிட்ட அவதாரத்துக்கு பிரார்த்தனை செய்து பலன் அடையலாம்.

வழிபாடுகள்

கோவிலில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கு வலம்புரி சங்கு தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் லட்சுமி நாராயணர் திருச்சுற்றில் உலா வருவார். தை, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி நாராயணர் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தசாவதார திருக்கோவில்.

1 More update

Next Story