நசரத்பேட்டை காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில்

நந்தியின் இடதுபுறத்தில் கீழ்ப் பகுதியில் ஒரு பாம்பு சிற்பம் அமைந்திருப்பது, நசரத்பேட்டை தலத்தில் மிக விசேஷமாகும்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ளது நசரத்பேட்டை. இங்கு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.
பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு
தெற்குதிசை நோக்கிய பிரதான நுழைவாசலைக் கொண்ட இத்தலம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளன. இத்தலத்தில் மிக விசேஷமாக நந்தியின் இடதுபுறத்தில் கீழ்ப் பகுதியில் ஒரு பாம்பு சிற்பம் உள்ளது. இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் காண இயலாது.
கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது விசேஷம். கிழக்குதிசை நோக்கி அமைந்த கருவறையில் ஈசன், 'காசி விஸ்வநாதர்' என்ற திருநாமம் தாங்கி காட்சி தருகிறார். அம்பாள் தெற்கு திசை நோக்கி ஒரு தனிச் சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் 'காசி விசாலாட்சி' என்ற திருநாமம் தாங்கி அருளுகிறார். கருவறைக் கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். அருகில் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்.
கோவிலின் உள்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சன்னிதி, நாகர்கள், வீரபத்திரர், நால்வர் சன்னிதி, பைரவர், சூரிய பகவான், சந்திரன், நடராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். துவாரபாலகர்களுக்கு முன்பாக அர்த்த மண்டபத்தில் நந்தியம் பெருமான் சிலை உள்ளது. இக்கோவிலில் சோமாஸ் கந்தருக்கு தனிச்சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனி பகவான் சன்னிதி மற்றும் கணபதி சன்னிதி அமைந்துள்ளன. ஐயப்ப பக்தர்களால், சுவாமி ஐயப்பனுக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. நாகரும், விநாயகரும் வில்வ மரத்தடியில் அமைந்துள்ளனர். வாத்திய மண்டபத்தின் வெளிப்புறத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்களும், கலைநயமிக்க சிற்பங்களும் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
விழாக்கள்
பங்குனி மாதத்தில் 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சூரியபகவான் தன் கதிர்களால் ஈசனை பூஜிக்கிறார். தினமும் இருகால பூஜை நடைபெறும் இத்தலத்தில் மாதப் பிரதோஷங்கள், மகாசிவ ராத்திரி, ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் மற்றும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
இத்தலம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பூவிருந்தவல்லியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது நசரத்பேட்டை. இங்கு உள்ள காந்தி தெருவில் காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.