திருமண கோலத்தில் சனீஸ்வரர் அருள்பாலிக்கும் விளங்குளம் ஆலயம்

விளங்குளம் கோவிலில் சனி பகவான் தன் துணைவியருடன் திருமணக் கோலத்தில் மங்கள சனீஸ்வரராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கிறார் ஈசன். இந்தக் கோவிலில் சனிபகவான், தனிச் சன்னிதியில் தம் தேவியருடன் ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்கள சனீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஒரு பிரளய காலத்தின் முடிவில், பூமியில் மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்குளம் கிராமக்கில் அட்சயபுரீஸ்வரராக இறைவன் தோன்றினார் என்கிறது தல புராணம்.
இந்த ஆலயத்தின் அம்பாளின் திருநாமம் அபிவிருத்தி நாயகி. இந்த அம்பிகை தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அட்சயப் பாத்திரம் போல், அள்ள அள்ளக் குறையாமல் அருளும், பொருளும் தந்தருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கணவருக்கு நிகராக, அம்பிகையும் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர். அட்சய திருதியை நாளிலும், வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவ பார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
எல்லாவற்றையும் விட, சனீஸ்வரர் ஆதிபிருஹத் சனீஸ்வரராக, மங்கள சனீஸ்வர பகவானாக இங்கே காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சனிக்கிழமைகளில், இவரை வந்து தரிசனம் செய்வது சிறப்பு. சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து சனிபகவானுக்கு வஸ்திரம் சாத்தி வணங்கினால் சகல யோகங்களும் தந்தருள்வார் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவான் நீதிமான். நீதி தவறாமல் இருப்பவர்களை ஒருபோதும் ஒன்றும் செய்யமாட்டார். தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிப்பதில் நீதி தவறாதவர்.
சூரியனின் மனைவி சமுக்ஞை. இவருடைய மகன் எமன். காலப்போக்கில் சூரியனின் மனைவியான சமுக்ஞைக்கு சூரியனின் வெப்பத்தை அருகிலிருந்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னைப் போலவே உருவம் கொண்ட சாயாதேவி என்ற பெண்ணைப் படைத்து, தன் கணவரான சூரிய பகவானிடம் விட்டுவிட்டு, சொல்லாமல் தந்தையின் வீட் டுக்குச் சென்றுவிட்டார். சூரியனும் சாயாதேவியை தன் மனைவி என்றே நினைத்து வாழ்ந்தார். அதன் பலனால் சூரியன்- சாயாதேவி தம்பதிக்கு மகனாக சனிபகவான் பிறந்தார்.
பிள்ளைகள் வளர்ந்து வரும்போது எமனுக்கும், சனிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாம். ஒருகட்டத்தில், எமன் சனி பகவானின் ஒருகாலைத் துண்டித்துவிட்டார். அதனால் வருத்தமடைந்த சனிபகவான் தன் கால் ஊனம் நீங்கவேண்டி மனித உருவில் பூமியெங்கும் சுற்றித்திரிந்தார். அப்படியான வேளையில், விளாமரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார். அங்கே இருந்த விளாமரத்தின் வேர் தடுக்கி பள்ளத்தில் விழுந்தார்.
அது, சித்திரை மாதத்தில், பூச நட்சத்திரம், வளர்பிறை திருதியை திதியுடன் கூடிய நன்னாள். சனிக்கிழமை சனிபகவான் விழுந்த இடத்தில் பல யுகங்களாக மறைந்திருந்த பூசஞானவாவி என்ற தீர்த்தம் பீறிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருளால் சனிபகவானின் ஊனம் நீங்கியது. அத்துடன் அந்த தீர்த்தம் சனி பகவானை மேலே கொண்டு வந்தது.
அட்சபுரீஸ்வரர் அருளால் தன் ஊனம் நீங்கிவிட்டதை உணர்ந்த சனிபகவான், சிவனாரை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு திருமண வரம் வழங்கி மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியரை திருமணம் செய்து கொள்ள அருளாசி வழங்கினார்.
அன்று முதல், இந்தத் தலத்தில், தன் துணைவியருடன் திருமணக் கோலத்தில் மங்கள சனீஸ்வரராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். விளாமரங்கள் சூழந்த இந்த வனம், பிறகு வசிப்பிடமானது. அப்போது விளங்குளம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல வரலாறு.
பிரளயம் முடிந்து மனித இனங்கள் தோன்றுவதற்கு முன்னரே, சனிபகவான் முதன் முதலில் அமர்ந்த தலம் இது. 'பிருஹத்' என்றால் பெரிதான என்று அர்த்தம். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்று பொருள் படும்படி, 'ஆதி பிருஹத் சனீஸ்வரர்' என்றும் 'மங்கள் சனீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
சனி தோஷம் தீர்த்து, சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி அருள்பவராக சனி பகவான் இங்கே எழுந்தருளி இருக்கிறார்.