கந்தர்மலை வேல்முருகன் கோவில்


கந்தர்மலை முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால் சுமார் 250 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும்.

கிருஷ்ணகிரி

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். அதற்கேற்ப கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காபட்டி என்ற கிராமத்தில் மலைமேல் அமைந்துள்ளது கந்தர்மலை வேல்முருகன் கோவில். இந்த கந்தர்மலையில் இன்றளவும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

தல சிறப்பு

ஒரு முறை முருகப்பெருமானோடு வள்ளிதேவி வனத்தில் இருந்தார். அப்போது வள்ளிதேவிக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் விக்கல் நிற்காததால், அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளிதேவி, முருகப்பெருமானிடம் வேண்டினாள். உடனே முருகப் பெருமான் “எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் உடனே விக்கல் நின்றுவிடும்” என்று கூறினார். அதன்படி வள்ளிதேவி, இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்றுவிட்ட தாக செவிவழிக் கதை சொல்லப்படுகிறது.

விக்கல் நிற்க, வள்ளிதேவி நீர் பருகியதாக கருதப்படும் குளம், 'வள்ளி குளம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கோவில் அமைப்பு

இந்தக் கோவில் கிட்டத்தட்ட 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கந்தர்மலை முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால் சுமார் 250 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும். வள்ளிதேவியின் தாகம் தீர்த்த இங்குள்ள மலைக்குகையில் சக்திவாய்ந்த சித்தர்கள் பலர் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். மேலும், அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள். கந்தர்மலை வேல் முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத் தடை நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும், தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றி வைப்பார் 'கந்தர்மலை வேல்முருகன்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப்பெருமான், இந்த கந்தர்மலையில் அருளும் ஆசியும் வழங்கி வருகிறார். இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமானுக்குரிய விழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திர விழாவின்போது நடைபெறும் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண விழா மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கின்றன. கந்தர்மலை வேல் முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அமைவிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுண்டக்காபட்டி என்னும் கிராமம். காவேரிப்பட்டினத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.

1 More update

Next Story