அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா திருக்கோவில்

பாமரர்கள் மற்றும் விவசாயிகளின் அச்சத்தினை தீர்க்கும் அய்யனார் என்பதால், இவரை ‘அச்சம் தீர்த்த அய்யனார்’ என்று அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக காணப்படும் வழிபாடுகளில் ஒன்று, சாஸ்தா வழிபாடு. சாஸ்தா கோவில்களில், அவர் தோன்றியதாகக் கருதப்படும் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மக்கள் பங்குனி உத்திர தினத்தன்று குடும்பத்தோடு தங்களின் குலதெய்வமாக வணங்கப்படும் சாஸ்தா கோவிலை தேடிச்சென்று, பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். அவ்வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சாஸ்தா கோவில்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில் மிகவும் சிறப்பானதாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் வயல்வெளிகள் சூழ செழிப்பாக இருக்கும் இடம்தான், தருவை கிராமம். பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர், நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் `தருவை'கள் என்று அழைக்கின்றனர். ஏன் என்றால் தருவை என்ற கிராமத்தில் பச்சையாறு, தாமிர பரணி ஆறு மாலையாக ஓடினாலும் கூட, பாசனத்துக்கு இதுபோன்ற நீர் ஊற்றுகளே காரணமாக இருக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் அக்னி தீர்த்தமாக சேரும் நீர் ஊற்றுகள் இதற்கு சான்றாகும்.
முன்னொரு காலத்தில் தருவை கிராமம் மிகப்பெரிய காடாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட முன்னீர்பள்ளத்தினை தாண்டி, பிராஞ்சேரி வரை காடாகத்தான் இருந்தது. இந்த பகுதியில் இருந்து வயல்வெளிக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வயல்வெளிகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு விஷ பூச்சிகளால் ஆபத்து ஏற்பட்டுவிடும். இந்த வழியாக பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், பொதுமக்களிடம் வழிப்பறியும் நடைபெறும். இதனால் அனைவரும் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இந்த பிரச்சினை எல்லாம் தீர அய்யனார் முன்பு நின்று, "அய்யா எங்கள் அச்சத்தினை தீர்க்க வேண்டும்" என்று வேண்டி நின்றனர். இவர்களுக்கு சாஸ்தா வேண்டிய அருள் வழங்கினார். ஒரு சமயம் விவசாயி தனது விளை பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கிவிட்டு, பணத்துடன் தருவை நோக்கி வந்தார். அப்போது அவரை முகமூடி அணிந்து நான்கு திருடர்கள் வழி மறித்தனர். கத்தியை காட்டி பணத்தினை கேட்டனர். உடனே அந்த விவசாயி "அய்யனே. என் மகள் திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணமல்லவா இது. இந்த பணத்தை இவர்களிடம் கொடுத்து விட்டால், என் மகள் திருமணம் என்னவாகும்" என்று அய்யனை நோக்கி வணங்கி நின்றார்.
மறு நிமிடம் திருடர்கள் கண் பார்வை பறிபோனது. வழிப்பறி திருடர்கள் அனைவரும் கண் பார்வை தெரியாமல் கதறினர். இதையடுத்து விவசாயி அங்கிருந்து தப்பிச் சென்று, அய்யனாருக்கு நன்றி கூறினார். இங்குள்ள அய்யனை வழிபடத் தொடங்கியபிறகு, விஷ பூச்சிகள் தீங்கு செய்யவும், சாஸ்தா அனுமதிப்பதில்லை என்கிறார்கள். இப்படி பாமரர்கள் மற்றும் விவசாயிகளின் அச்சத்தினை தீர்க்கும் அய்யனார் என்பதால், இவரை 'அச்சம் தீர்த்த அய்யனார்' என்று அழைக்கிறார்கள்.
இவர் திருமண கோலத்தில் பூரண - புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்துடன் இந்த கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு முதல் நாள் மாக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மறுநாள் அதிகாலை அபிஷேகம் அலங்காரம் நடந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அன்று முழுவதும் அன்னதானம் நடைபெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தருவை மெயின் ரோடு. இங்கிருந்து 1 கிலோமீட்டர் உள்ளே சென்றால் கோவிலை அடையலாம்.