ஜனநாயகனுக்கு விழுந்த முட்டுக்கட்டை.. தொடர்ந்து இழுபறியில் பராசக்தி

பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.
சென்னை,
2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த பொங்கல் ஸ்பெஷலாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜனநாயகன் படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், அறிவித்த தேதியில் படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பாக படக்குழு சென்னை ஐகோர்ட்டு வழக்கு தொடர்ந்தது.
ஜனநாயகன் சென்சார் போர்டு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா இன்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது என்றும், இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஜனநாயகனைத் தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள பராசக்தி படத்தில் 15 காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிற நிலையில் பராசக்தியும் வராமல் போனால் இந்த பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே முடியும் என்று கூறப்படுகிறது.






