இன்றைய வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்!

உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை... பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட பயணம். இந்த வாழ்க்கை பயணம் என்பது மனிதர்கள் தோன்றிய காலமான சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஒரே மாதிரியாக இருந்து வருகிறதா? என்று பார்த்தால், அதுதான் இல்லை. காலத்துக்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டே இருக்கிறது.
சரி.. தற்போதைய வாழ்க்கை முறை எப்படி செல்கிறது? என்று பார்த்தால், பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நகர வாழ்க்கை மட்டுமல்ல, கிராமப்புற வாழ்க்கையும்கூட இயந்திரத்தனமாக மாறிபோய்விட்டது. விளைவு.. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது செல்போன் வருகைக்கு பிறகே அபரிமிதமாக உள்ளது. 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை செல்போன் என்பது இல்லை. குறிப்பிட்ட வீடுகளில் மட்டுமே 'லேண்ட்லைன்' என்று சொல்லக்கூடிய கேபிள் வழி தொலைபேசிகள் இருந்தன. பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் தபால் வழியாக மெதுவாகவே நடந்தன. அதுவரை அனைவரது வாழ்க்கை முறையும் வேகம் எடுக்கவில்லை.
ஆனால், 'செல்போன் வருகைக்கு பிறகு நினைத்தபடி வாழ்கிறோமா?' என்ற கேள்வியை நாம் முன்வைத்தால், பலரிடம் இருந்து 'இல்லை' என்ற பதிலே வருகிறது. அவ்வப்போது எடுக்க வேண்டிய முடிவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இது ஒரு பக்கம் வாழ்க்கை முறையை மாற்றினால், மற்றொரு பக்கம் நிதிச் சுமை மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
முந்தைய காலத்தில், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், முதலில் பணத்தை வங்கியில் சிறுக.. சிறுக.. சேர்ப்பார்கள். தேவையான அளவு பணம் சேர்ந்ததும் அதைக் கொண்டு குறிப்பிட்ட பொருளை வாங்குவார்கள். இதில், மன நிறைவு கிடைத்தது. கடன் வாங்குவதே அப்போது இழிவாக பார்க்கப்பட்டது. அதிகபட்சமாக, மகள் திருமணம், புதுவீடு கட்டுதல் போன்றவைகளுக்கே கடன் வாங்கப்பட்டது.
ஆனால், இன்றைக்கு வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் கடனுக்கு வாங்கிக் குவிக்க, வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கடன் உதவிகளை அளிக்கின்றன. அதுவும், இப்போது முகம் பார்க்காமலேயே செல்போன் செயலி மூலம் உடனடி கடன் பெற முடியும். இப்படி கடன் வாங்குவது வேண்டுமானால் எளிமையாக தெரியலாம். ஆனால், அதை திருப்பிச் செலுத்தும்போதுதான் வேதனையின் உச்சத்தை உணர முடியும்.
அதுபோல, தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இப்போது தினமும் 'டார்கெட்', அதாவது 'இலக்கு' நிர்ணயிக்கப்படுகிறது. அந்த இலக்கை அடைவதற்குள் அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள்.
இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை முறையால், தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பெரும்பாலானோர் ஆளாகிறார்கள். இப்படி மன ரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் நாளடைவில் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இன்று இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு இதுபோன்ற அசாதாரண வாழ்க்கை முறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உடல் ரீதியிலான பிரச்சினைக்கு மருந்துகள் பல இருக்கின்றன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு ஒரே தீர்வு யோகா தான். இது இந்தியாவின் பழமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இன்றைக்கு 120 நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவை ஈஷா யோகா மையத்துடன் தினத்தந்தி டாட் காம், டிடி நெக்ஸ்ட் டாட் காம் ஆகியவை இணைந்து 'யோகா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆரம்பம்' என்ற தலைப்பில் சென்னை, கோவை உள்பட 15 முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.
10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://www.dailythanthi.com/yoga-day-2025 என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பெறவேண்டும்.