நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி- பிரம்ம குமாரிகள் இயக்கம் ஏற்பாடு

யோகாவின் ஆன்மாவை மீட்டெடுக்கும் முயற்சியாக நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்லாமல், அது ஒரு வாழ்க்கை முறை ஆகும். யோக பயிற்சியின் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் சர்வதேச யோகா தினம் உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாறியுள்ளது. இந்த நாள், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கிறது. அவ்வகையில் இந்த ஆண்டு யோகா தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உலக நகரங்கள் தயாராகி வரும் நிலையில், அதற்கு மறுநாள் அமெரிக்காவில் யோகாவின் உள்ளார்ந்த சாரத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'யோகாவின் உணர்வு' என்ற தலைப்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, ஜூன் 22 அன்று நியூயார்க்கின் லாங் தீவில் உள்ள கிரேட் நெக்கில் உள்ள குளோபல் ஹார்மனி ஹவுஸில் பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக அமைப்பால் இணைந்து நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான யோகா தின கொண்டாட்டங்கள் உடல் சார்ந்த பயிற்சிகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையின் பொதுவான சாராம்சங்களை சுற்றியே இருந்தாலும், 'யோகாவின் உணர்வு' திட்டம் யோகாவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், அதன் ஆன்மீக வேர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாகவும் இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் யோக கலையின் சிறப்பம்சங்கள், நன்மைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். காணொலி வாயிலாகவும் பலர் கலந்து கொள்வார்கள்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதர் பினயா ஸ்ரீகாந்த பிரதான் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு 'உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா' என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். பிரம்மா குமாரிகள் சர்வதேச அமைப்பின் தலைமை நிர்வாகத் தலைவர் பி.கே. மோகினி தீதி முன்னிலை வகிக்கிறார்.