தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் வெயில் சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வாளர்கள்

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு வெயில் சுட்டெரிக்கும் என்றும், இரவில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வந்த சூழ்நிலையில், தற்போது இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் உருவான ‘மோந்தா' புயல் கரையை கடந்து கிழக்கு திசை காற்றை இழுத்து சென்றது. கிழக்கு திசை காற்று இல்லாததால், மேற்கு காற்றின் ஊடுருவல் ஏற்பட்டு அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.இது முன்னெப்போதும் இல்லாத வெப்பப் பதிவாக பார்க்கப்படுகிறது. அதிலும் சென்னை நுங்கம்பாக்கம் நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வரலாறு காணாத அளவுக்கு வெயில் பதிவை சந்தித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 95.9 டிகிரி (35.5 செல்சியஸ்) வெயில் பதிவானது. இதற்கு முன்பு கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்) பதிவானதுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த பதிவை இது கடந்திருக்கிறது.
சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒருவாரத்துக்கு அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கிழக்கு திசை காற்று இல்லாதது, சுமத்ரா கடல் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரிக்கிறது.கடல் வெப்பநிலை அதிகரிப்புதான் வருகிற 2-வது வாரத்துக்கு பிறகு மழைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் பகலில் வெப்பம் சுட்டெரித்தாலும், வெப்பசலனம் காரணமாக இரவில் இடி மின்னலுடன் மழை என்ற சூழல் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாகிறது.இது தொடர்ந்து நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளில் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) வந்து வலு இழந்து, கிழக்கு திசை காற்றை கொடுக்கும். இதனால் 10-ந்தேதிக்கு பிறகு வெப்பம் குறையும்.பின்னர் மீண்டும் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதாக சொல்லப்படுகிறது.






