வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது.
தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது
இதனால் வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. வானிலை அமைப்பு மாறியதால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. அதில் சென்னை மாநகரும் அடங்கும்.
இந்தநிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று (வியாழக்கிழமை), வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான சூழல் இருக்கிறது. நிலப்பரப்பில் இருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடல் பகுதிக்கு சென்று, மீண்டும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக வலுப்பெறும் எனவும், இதனால் அன்றைய தினத்தில் இருந்து மழைக்கான வாய்ப்பு மீண்டும் தீவிரம் அடையும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
தற்போது சென்னை உள்பட அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.






