உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Jun 2025 11:15 AM IST (Updated: 13 Jun 2025 11:15 AM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது.

முனிச்,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா உள்பட 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சம்ரா இறுதிப்போட்டியில் 453.1 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த பந்தயத்தில் உலக சாதனையாளராக விளங்கும் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது சம்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பியூனஸ் அயர்சில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

தகுதி சுற்றில் 6-வது இடம் பெற்ற நார்வே வீராங்கனை ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் இறுதி சுற்றில் 466.9 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சுவிட்சர்லாந்து வீராங்கனை எமிலி (464.8 புள்ளி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சோக்சி (589) 11-வது இடமும், அஞ்சும் மோட்ஜில் (586) 27-வது இடமும், ஸ்ரீயங்கா சடான்ஜி (582) 53-வது இடமும், நிஸ்சால் (580) 60-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் வெண்கலம் வென்றிருந்தார்.

1 More update

Next Story