மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@ProKabaddi
அரையிறுதியில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாக்கா,
11 அணிகள் இடையிலான 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 33 -21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் சீன தைபே அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோத உள்ளன.






