அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி

கோப்புப்படம்
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.
அகமதாபாத்,
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த முதலாவது அரையிறுதியில் தபாங் டெல்லி - ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 8-7 என்ற கணக்கில் டெல்லியை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன் ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் கனக் ஜா (ஜெய்ப்பூர்) 7-11, 11-10, 11-3 என்ற செட் கணக்கில் கியூக் ஐசாக்கையும் (டெல்லி), யஷான்ஷ் மாலிக் (ஜெய்ப்பூர்) 11-10, 11-9, 6-11 என்ற செட் கணக்கில் சத்யனையும் (டெல்லி) வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் ஆட்டங்களில் மரியா சியாவ் (டெல்லி) 6-11, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் பிரிட் எர்லாண்டையும் (ஜெய்ப்பூர்), ஸ்ரீஜா அகுலா (ஜெய்ப்பூர்) 11-9, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் தியா சித்தலேவையும் (டெல்லி) சாய்த்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் மரியா சியாவ்- சத்யன் (டெல்லி) இணை 8-11, 11-9, 11-10 என்ற செட் கணக்கில் பிரிட் எர்லாண்ட்- ஜீத் சந்திரா (ஜெய்ப்பூர்) ஜோடியை தோற்கடித்தது. இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ்- யு மும்பா அணிகள் மோதுகின்றன.