ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஈட்டி எறிதல் வீரர்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது
புதுடெல்லி,
இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங்கிடம் போட்டி இல்லாத காலத்தில் அவரது சிறுநீர் மாதிரியை சேகரித்து ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்குவது இது 2-வது முறையாகும்.
தற்போது உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அவர் மீது தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் 8 ஆண்டு வரை தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ஷிவ்பால் சிங் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று இருந்தார். அதில் தகுதி சுற்றோடு வெளியேறினார். 2019-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் 86.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றதே அவரது சிறந்த செயல்பாடாகும்.