சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது... - சாம்சன் நெகிழ்ச்சி

image courtesy:twitter/@ChennaiIPL
சஞ்சு சாம்சனை டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டோனி, டிவால்ட் பிரேவிஸ், ஊர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் முகமது, கலீல் அகமது, அன்ஜூல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எலிஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.
இதில் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் மகேந்திரசிங் தோனிக்கு இது கடைசி ஐ.பி.எல். தொடர் என கூறப்படும் நிலையில் அவரது இடத்தை நிரப்ப சாம்சன்தான் சரியானவர் என்று தற்போது ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், சிஎஸ்கே ஜெர்சி அணிந்தது குறித்தும் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியான சில கருத்துகளை பேசியுள்ளார்.
அதில், “மஞ்சள் நிற ஜெர்சியை அணியும் நாளுக்காக காத்திருந்தேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். இன்னைக்கு மஞ்சள் ஜெர்சியை அணிய போகிறேன். நான் ஐபிஎல் போட்டிகளில் அடர்ந்த நிறத்திலான ஜெர்சிகளை அணிந்ததை விட மஞ்சள் நிறத்தினை அணிவது வித்தியாசமாக இருக்கிறது. அந்த ஜெர்சியை அணிவேன் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததில்லை. அது ஒரு நேர்மறை உணர்வைத் தந்தது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அது வேறுவிதமாக உணர வைத்தது, ஒரு புதிய சக்தி போன்றது. நான் ஒரு சாம்பியன் போல உணர்ந்தேன். ‘சரி, வாவ்!’ என்று தோன்றியது!” என கூறினார்.






