முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

image courtesy:twitter/@ZimCricketv
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் - மருமணி களமிறங்கினர். இவர்களில் மருமணி 10 ரன்களிலும், அடுத்து வந்த டெய்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் பென்னட் உடன் கேப்டன் சிக்கந்தர் ராசா கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென்னட் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ராசா 47 ரன்களில் வீழ்ந்தார்.
அடுத்து வந்த வீரர்களில் ரையன் பர்ல் (18 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். முடிவில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்துள்ளது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இலங்கை களமிறங்க உள்ளது.






