சென்னை - ஐதராபாத் ஆட்டத்தின் போக்கை மாற்றிய கேட்ச்.. வைரல் வீடியோ

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்தபோது ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்து நல்ல நிலையில் இருந்தது. இதனால் சென்னை அணி 180-200 ரன்கள் அடிக்கும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஏனெனில் கமிந்து மென்டிஸ் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்சர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய டிவால்ட் பிரேவிஸ் களத்தில் இருந்தார். அடுத்த ஓவரை (13-வது ஓவர்) வீசிய ஹர்ஷல் படேல் பந்து வீச்சிலும் 4-வது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். ஆனால் அடுத்த பந்திலேயே (5-வது பந்து) டிவால்ட் பிரேவிஸ் (42 ரன்கள், 25 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) தூக்கி அடித்த பந்தை கமிந்து மென்டிஸ் அந்தரத்தில் பாய்ந்து அபாரமாக கேட்ச் செய்தார். ஒருவேளை இந்த கேட்சை கமிந்து மெண்டிஸ் தவற விட்டிருந்தால் சென்னை அணி நிச்சயம் 180 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த கேட்ச் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.