இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 3-வது வரிசையில் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன் - ரவி சாஸ்திரி

எந்தெந்த வரிசையில் யார்? களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
லண்டன்,
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது.
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடரில் இந்திய அணியின் முதலாவது ஆட்டம் இதுவாகும். சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி,.அஸ்வின் ஓய்வுக்கு பிறகு சுப்மல் கில் தலைமையில் இந்திய இளம் படை டெஸ்டில் முதல்முறையாக கால் பதிக்கிறது. சீனியர்கள் இல்லாத குறையை சமாளித்து இந்திய அணி எப்படி சாதிக்க போகிறது. எந்தெந்த வரிசையில் யார்? களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான தனது இந்திய ஆடும் லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கலந்தாய்வில் கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது:-
தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இருப்பார். அவருடன் லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரராக அங்கம் வகிப்பார். 3-வது இடத்துக்கு இளம் வீரர் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன். அவர் மிகவும் ஈர்க்ககூடிய வீரர். இந்த பயணம் அவருக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும். 4-வது வரிசையை கேப்டன் சுப்மன் கில்லுக்கு கொடுப்பேன். தற்போதைய பார்மை பொறுத்தமட்டில் கருண் நாயர் ஆடும் அணியில் இருப்பார். அவர் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார். 6-வது இடத்தில் ரிஷப் பண்ட் இருப்பார்.
3 வேகப்பந்து வீச்சாளர்களாக நான் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்வேன். ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருப்பார். ஷர்துல் தாக்குர்-நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் யார் அதிகம் பந்து வீச தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஒருவருக்கு இடம் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.